search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில்
    X

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில்

    • இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரணேற்று என்ற ஒரு திருவிழா நடத்தப்படுகிறது.
    • பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள இன்னொரு பிரசித்திப் பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு தூக்க முடிப்புரை கோவிலும் ஒன்று. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் இரண்டு தேவிகள் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். இதனால் இங்கு தேவிகள் வசிக்க இரண்டு கோவில்கள் உள்ளது.

    ஒன்று வெங்கஞ்சி திருவிழா கோவில். மற்றொன்று திருவிழா நாட்களை தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அமர்ந்து ஆசி வழங்கும் வட்டவிளை மூலக்கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மீன மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழா வில் பத்தாம் நாள் மீனபரணி நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது.

    இதில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கோவில் குமரி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இங்கு நடத்தப்படும் பூஜைகள் அனைத்தும் கேரள முறைப்படி நடத்தப்படுகிறது. கோவிலின் அமைப்பும் கேரள முறையில் தான் அமைந்துள்ளது.

    குழந்தை பேறு இல்லாத தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்தால் அம்மனுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றுவதாக இங்கு வந்து வேண்டிக் கொள்வார்கள். இதேபோல குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழவும் வேண்டுவார்கள்.

    திருமணமாகாத பெண்கள், திருமணம் நடக்க அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். அதன்படி வேண்டுதல் நிறைவேறியதும் தங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்து அந்தரத்தில் தொங்கியபடி கோவிலை வலம் வரும் நேர்ச்சைக்காரர்களிடம் கொடுத்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகிறார்கள்.

    இதேபோன்று இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரணேற்று என்ற ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. இது கோவிலில் இருக்கும் தேவிகள் அசுரனை வதம் செய்யும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

    இந்த கோவில் களியக்காவிளை பகுதியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், உச்சகடை பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. களியக்காவிளை பகுதியில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. திருவிழா நாட்களில் நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    ஆடி மாதம் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். மேலும் இந்த மாதத்தில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை மிகவும் விசேஷமானது. அதிகாலை வேளையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை அம்மன் முன்பு வைத்து பூஜை நடத்துவர். பின்னர் அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

    மெய்சிலிர்க்க வைக்கும் தூக்க நேர்ச்சை

    கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை 10 நாட்கள் தூக்க திருவிழா நடக்கிறது. 4 மர சக்கரங்களுடன் கூடிய தேர் போன்று தூக்க வண்டி அமைந்திருக்கும். அந்த தூக்க வண்டியின் உச்சியில் நீளமான இரண்டு களை கம்புகள் (வில்) பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வில்களின் நுனியிலும் குறுக்குவாட்டில் தலா இரண்டு மரச்சட்டங்கள் இருக்கும்.

    தூக்க வண்டியில் இருப்போரை தூக்ககாரர்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வண்டியிலும் 4 தூக்கக்காரர்களை மார்பிலும், இடுப்பிலும் துணியால் கட்டி அந்த மரச்சட்டங்களில் தொங்கவிடுவார்கள். தொங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு நபரின் கைகளிலும் தலா ஒரு பச்சிளம் குழந்தை.

    தூக்க நேர்ச்சை தொடங்கியதும் தூக்க வண்டியின் வில்களின் பின்பகுதியை கயிறால் கட்டி சிலர் கீழே இழுப்பார்கள். இதனால் முன்பகுதி சர்ரென மேலே போகிறது. அப்போது 4 தூக்கக்காரர்களும் குழந்தைகளுடன் 40 அடி உயரத்தில் மேலே தொங்குவார்கள். அப்போது சுற்றி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலவையிட்டு பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் செண்டை மேளம் ஒலிக்க, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வடம் பிடித்து தூக்க வண்டியை கோவிலை சுற்றி இழுத்து வருவார்கள்.

    அந்தரத்தில் குழந்தைகளுடன் தொங்கியபடியே அந்த 4 நபர்களும் கோவிலை ஒரு சுற்று சுற்றி முடிந்ததும் கீழே இறங்குவார்கள். பிறகு வேறு 4 நபர்களை தூக்க வண்டியில் கட்டி தொங்கவிட்டு அவர்களின் கைகளில் வேறு நான்கு குழந்தைகள் கொடுக்கப்படும். இப்படி அதிகாலையில் தொடங்கி இரவு வரை விடிய, விடிய தூக்க நேர்ச்சை நடைபெறும். இந்த காட்சியை காணும் பக்தர்களுக்கு மெய்சிலிர்க்கும். குழந்தைகளை அந்தரத்தில் தூக்கிச் சென்றபடி அம்மனை வழிபடுவதால் இந்த திருவிழாவுக்கு தூக்க நேர்ச்சை திருவிழா என்று பெயர்.

    தூக்க காரர்கள் 4-ம் திருவிழா நாளில் இருந்தே விரதமிருக்க வேண்டும். கோவில் வளாகத்தில் தான் தங்க வேண்டும். அந்த 7 நாட்களும் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு எளிமையான உணவு வழங்கப்படும்.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் வழிபாட்டு நேரம்

    கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் மீனப்பரணி தூக்கத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடத்த ஒரு கோவிலும், தூக்க நேர்ச்சை திருவிழா நடத்த ஒரு கோவிலும் என தனித்தனியாக 2 கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் தினமும் நடைபெறும் பூஜை விபரம்:-

    காலை 5.00 மணிக்கு நடை திறத்தல்

    காலை 5.15 மணிக்கு நிர்மால்ய பூஜை, தொடர்ந்து கணபதி, சிவன் சன்னதியில் பூஜை,

    பகல் 11.30 மணிக்கு உச்சபூஜை

    மதியம் 12 மணிக்கு நடை அடைத்தல்

    மாலை 5.00 மணிக்கு நடை திறத்தல்

    மாலை 6.30 மாலை பூஜை

    இரவு 7.30 அத்தாழ பூஜை

    இக்கோவிலில் தமிழ் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை நடைபெறுகிறது.

    மாதந்தோறும் வரும் பரணி நட்சத்திர நாளில் விசேஷ பூஜை நடைபெறும். தினசரி பூஜையை கோவில் பூசாரிகள் செய்யும் நிலையில் பரணி நட்சத்திர நாள் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதம் 1-ந்தேதி அதிகாலை 4.50 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஓணம் திருநாளில் கோவிலைச் சுற்றி அம்மன் எழுந்தருளல் நடைபெறும். இக்கோவிலில் நேர்ச்சைகள் மற்றும் வழிபாடுகள் ஆன் லைனில் புக்கிங் செய்யப்படுகிறது.

    Next Story
    ×