search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனி
    X

    தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனி

    • 6-ந் தேதி பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
    • இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

    கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கபடுகிறது.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஒலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

    உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று காலை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது.

    இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து குருத்தோலைகளை கையில் ஏந்திய பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

    அப்போது மழை பெய்ததால் பலர் குடை பிடித்தபடி சென்றனர்.

    இன்று முழுவதும் பேராலயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ் , ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரை காலையிலேயே அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஏராளமானோர் திரண்டனர். நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் காலை 6.30 மணிக்கு குருத்தோலை பவனி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. நாகர்கோவில் அசிசி ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம்உள்பட மாவட்டடத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடை பெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் திரளாக பங்கேற்றனர்.

    குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வருகிற 3,4 மற்றும் 5-ந் தேதிகளில் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறித்து அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    6-ந் தேதி பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. 7-ந் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    Next Story
    ×