search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மருதமலை கோவிலில் நாளை தைப்பூச தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    X

    வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலை படத்தில் காணலாம்.

    மருதமலை கோவிலில் நாளை தைப்பூச தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    • இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
    • அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமா்சையாக நடைபெறும். இந்்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவையொட்டி சுப்பிரமணியசுவாமி கோவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தைப்பூச தேரோட்டத்தையொட்டி மருதமலை கோவிலில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை பார்வையிட கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று மருதமலை கோவிலுக்கு வந்தார்.

    தொடர்ந்து வாகன நிறுத்தும் இடம், பக்தர்கள் பாதுகாப்பாக பாதயாத்திரை வருவதற்கான வழிப்பாதைகள், மலைப்பாதை, மலைக்கோவில் மீது சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிகள், தேர் சுற்றி வரும் கோவில் வளாகம், ராஜகோபுர பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

    தைப்பூச திருவிழாவையொட்டி மலைக்கோவிலுக்கு செல்ல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால், மருதமலை அடிவாரப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவில் சார்பில் மினி பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டு பக்தர்களை மலைக் கோவிலுக்கு ஏற்றி செல்லும்படி கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பாதுகாப்பாக சென்று தரிசனம் செய்யும் வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×