search icon
என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • எகிப்து எல்லையை யொட்டியுள்ள இப்பகுதியில் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
    • காசாவுக்குள் நுழையும் அனைத்து இடத்தையும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த சண்டைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் இழந்து வருவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின் றன. ஆனாலும் இஸ்ரேல் தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.

    சண்டை நீடித்து வருவதால் காசா முகாம்களில் உள்ள பொதுமக்கள் உயிர் பயத்தில் இருந்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட எதுவும் சரிவர கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு காசா நகரமான ரபாவில் தங்கி உள்ளனர். எகிப்து எல்லையை யொட்டியுள்ள இப்பகுதியில் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

    இங்கிருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் ரபாவில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்வது போர் குற்றமாகும், காசாவுக்குள் நுழையும் அனைத்து இடத்தை யும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் வடக்கு காசாவில் மிகப்பெரிய அல்-ஷிபா மருத்துவமனை அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று குருத் தோலை ஞாயிறையொட்டி காசாவில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்தனை நடந்தது.

    • சமீப காலமாக மேக்ரான் ரஷியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
    • நெட்டிசன்கள் பலரும் மேக்ரானை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குத்துச்சண்டை (பாக்சிங்) செய்வது போன்ற சில புகைப்படங்களை அவரது அதிகாரப்பூர்வ புகைப்பட கலைஞர் சோசிக் டி லா மொய்சோனியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், ஒரு படத்தில் மேக்ரான் உறுதியான முகபாவத்தில் பற்களை கடித்து கொண்டிருப்பது போன்றும், மற்றொரு படத்தில் அவர் குத்துசண்டையில் கவனம் செலுத்துவதையும் காணமுடிகிறது.

    சமீப காலமாக மேக்ரான் ரஷியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    நெட்டிசன்கள் பலரும் மேக்ரானை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • 2022ல், டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, சில எலும்புகளை கண்டார்
    • டைட்டனோசர் எலும்புக்கூடு, க்ரூசி அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது

    பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள க்ரூசி (Cruzy) பகுதிக்கு அடுத்துள்ளது மோன்டோலியர் (Montouliers) காட்டுப் பகுதி.

    இப்பகுதியை சேர்ந்த தொல்பொருள் ஆர்வலரான டேமியன் போஷெட்டோ (Damien Moschetti) இங்கு தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    கடந்த 2022ல், டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, அந்த மலைப்பகுதியில், புதைந்த நிலையில் சில எலும்புகள் தென்படுவதை கண்டார்.

    இதையடுத்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஆய்வை தொடங்கினர்.

    ஆய்வுப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் தொடர்ந்தால், புதைபொருட்களுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால் அப்பகுதி முழுவதையும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

    இந்த ஆராய்ச்சியில் பெருமளவிற்கு தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். மேலும், இந்த ஆய்வு ரகசியமாக நடத்தப்பட்டது.


    சுமார் 2 வருட காலம் பல முறை 10 நாட்கள் இடைவெளியில் நடத்தப்பட பல்வேறு ஆய்வில், டேமியனால் கண்டறியப்பட்ட புதைவடிவம், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகை டைனோசரின் எலும்பு கூட்டின் 70 சதவீத புதைவடிவம் என தெரிய வந்தது.

    அது சுமார் 7 கோடி (70 மில்லியன்) வருடங்களுக்கு முன் வாழ்ந்த "டைட்டனோசர்" (titanosaur) எனும் அரிய டைனோசர் உயிரினத்தின் புதைந்த எலும்புகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த டைட்டனோசர் எலும்புக்கூடு, க்ரூசி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    "கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக க்ரூசி நகரின் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்களின் புதைபடிவங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்படுகின்றன. ஆனால், இம்முறை கிடைத்திருப்பது அந்த உயிரினத்தின் உடலில் இருந்த 70 சதவீத பெரும்பாலான பாகங்கள்" என க்ரூசி அருங்காட்சியகத்தின் நிறுவனர், பிரான்சிஸ் ஃபேஜ் (Francis Fage) தெரிவித்தார்.

    • அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடியால் உக்ரைனுக்கு உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது
    • சர்வதேச சட்டங்களை மீறி ஐரோப்பா வலிமை இழப்பதை விரும்பவில்லை என்றார் மேக்ரான்

    2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து நடைபெற்ற உலக தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் (Emmanuel Macron), "உக்ரைனுக்கு தரைப்படைகளை அதிகாரப்பூர்வ முறையில் அனுப்புவதில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. ஆனால், படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லவே இல்லை என கூற முடியாது" என தெரிவித்திருந்தார்.

    மேக்ரானின் கருத்திற்கு பிரான்சிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக இருந்தது.

    இந்நிலையில், மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசிற்கு (Czech Republic) சென்றிருந்த மேக்ரான், அந்நாட்டின் அதிபர் பீட்டர் பவெலை (Petr Pavel) சந்தித்தார்.

    இச்சந்திப்பிற்கு பிறகு மேக்ரான் தெரிவித்ததாவது:

    ரஷியாவை எதிர்க்கும் உக்ரைனை நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.

    ஆதரவு அளிக்கும் நாடுகள் கோழைகளாக கூடாது.

    நாம் கோழைகள் அல்ல என உறுதியாக உலகிற்கு தெரிவிக்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.

    இது நமது போர். நடப்பது நடக்கட்டும் என நாம் கண்டும் காணாமல் எவ்வாறு இருக்க முடியும்?


    அதனால்தான் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் துருப்புகளை இறக்க வேண்டிய அவசியம் வந்தால் கண்டிப்பாக அதை செய்வோம் என நான் முன்பு கூறினேன். அந்த நிலையில் நான் பின் வாங்க மாட்டேன்.

    நாம் ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இல்லை.

    உக்ரைனில் நிலைமை சீரடைவதையே நாம் விரும்புகிறோம்; மோசமடைவதை அல்ல.

    சர்வதேச சட்டங்கள் எதையும் மீறி அதனால் ஐரோப்பாவின் நிலைமை வலிமை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை.

    இவ்வாறு மேக்ரான் தெரிவித்தார்.

    • ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் பெற்றால் மசோதா வெற்றி பெறும்.
    • ஆதரவு தெரிவித்து 780 வாக்குகள் பதிவானதால் மசோதா நிறைவேறியது.

    கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை தொடர்பான சட்ட மசோதா பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் கருக்கலைப்பு செய்ய இனிமேல் சட்டப்பூர்வ அனுமதி பெறத் தேவையில்லை. பெரும்பாலான நாடுகள் கருக்கலைப்பிற்கு எதிராக இருந்து வரும் நிலையில், கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை என அறிவித்த முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் பெற்றுள்ளது.

    இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின. ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் சட்டத்தை நிறைவேற தேவை என்ற நிலையில் அமோக பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறியது.

    இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் வெளியிட்டுள்ள செய்தியில் "நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்கிறோம். உங்களுடைய உடல் உங்களுக்கானதாக நம்பப்படுகிறது. உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    கருக்கலைப்புக்கு ஆதரவானோர் இந்த செய்தியை கேட்டு பிரான்ஸ் ஈபிள் டவர் முன் குவிந்து தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் "என்னுடைய உடல் என்னுடைய தேர்வு" என்பதை வெளிப்படுத்தினர். மேலும் இந்த வாசகம் ஈபிள் டவரில் மின்விளக்கால் ஜொலித்தது.

    பிரான்ஸ் நாட்டில் 1974-ம் ஆண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிக அளவில் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லை என கூற முடியாது என மேக்ரான் கூறியிருந்தார்
    • நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாக சிந்தித்து கூறப்பட்டவை என்றார் மேக்ரான்

    2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களை கடந்தும் தொடர்கிறது.

    உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் தொடர்ந்து உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று, உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து நடைபெற்ற உலக தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல், மாநாட்டிற்கு பிறகு நிருபர்களிடம், "உக்ரைனுக்கு தரைப்படைகளை அதிகாரப்பூர்வ முறையில் அனுப்புவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லவே இல்லை என கூற முடியாது" என தெரிவித்தார்.

    மேக்ரானின் கருத்தை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலர் கருத்து கூறி வந்தனர்.

    மேற்கத்திய துருப்புகளை உக்ரைனுக்கு அனுப்பும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் நிராகரித்தன. ஆனால், எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் நிராகரிக்கவில்லை.

    பிரான்சிலும் எதிர்க்கட்சிகளால் மேக்ரான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

    மேக்ரானுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷிய பாராளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகர், "உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்பும் முடிவை மேக்ரான் எடுத்தால், அவரது படைக்கு நெப்போலியனின் ராணுவத்திற்கு ஏற்பட்ட கதிதான் நேரும்" என எச்சரித்தார்.

    இந்நிலையில், பிரான்சில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான பணிகளை காணச் சென்ற மேக்ரானிடம் உக்ரைனுக்கு படைகளை அனுப்புவது குறித்து மீண்டும் கேட்கப்பட்டது.


    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உக்ரைன் ஆக்கிரமிப்பு ஒரு முக்கியமான சர்வதேச பிரச்சனை.

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் குறித்த எனது கருத்துகள் சிந்தித்து கூறப்பட்டவை.

    நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சரிபார்க்கப்பட்டு, ஆழமாக சிந்தித்து கூறப்பட்டவை.

    இவ்வாறு மேக்ரான் கூறினார்.

    ஆனால், தனது நிலை குறித்து மேலும் விவரங்கள் அளிக்கவோ அல்லது கருத்துகள் கூறவோ மேக்ரான் மறுத்து விட்டார்.

    நேட்டோ நாடுகளின் துருப்புகள் உக்ரைனில் இறங்கினால், உலகம் ஒரு அணு ஆயுத போரைக் காண வேண்டி வரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தளவாடங்கள் இல்லாததால் ரஷிய ராணுவம் முன்னேறுவதை உக்ரைனால் தடுக்க முடியவில்லை
    • ரஷியா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம் என்றார் மேக்ரான்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு தொடர்ந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவுகிறது.

    உக்ரைனிடம் போதுமான அளவு ராணுவ தளவாடங்கள் இல்லாததால், தங்கள் நாட்டில் ரஷிய ராணுவம் முன்னேறி , பிராந்தியங்களை கைப்பற்றுவதை தடுப்பது கடினமாக உள்ளது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.

    மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவிகள் கிடைப்பது தாமதமாவதால், உயிரிழப்புடன் உக்ரைனின் பல பிராந்தியங்களை ரஷியாவிடம் இழக்க நேரிடும் என உக்ரைன் ராணுவ அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார்.


    இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.

    இதில் பேசிய பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் தெரிவித்ததாவது:

    இப்போரில் ரஷியா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷியா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம்.

    ரஷியா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்.

    ரஷியாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷிய மக்களுடன் அல்ல.

    குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும்.

    உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம்.

    இவ்வாறு மேக்ரான் கூறினார்.

    சில தினங்களுக்கு முன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், "நேரடியாக மேற்கத்திய நாடுகளின் ராணுவம் உக்ரைன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷியாவிற்கும் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் "என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்ஸ் தேசிய கொடியை மஹ்ஜோபி அவமதித்து வீடியோ பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது
    • நாட்டை அவமதிப்பவர்களை எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம் என்றார் டர்மனின்

    பிரான்சில் பக்னோல்ஸ்-சர்-செஸ் (Bagnols-sur-Ceze) பகுதியில் மத பணிகளில் ஈடுபட்டு வந்தவர் இமாம் மஹ்ஜோப் மஹ்ஜோபி (Mahjoub Mahjoubi). துனிசியா (Tunisia) நாட்டை சேர்ந்த மஹ்ஜோபி 38 வருடங்களுக்கு முன்பே பிரான்சில் குடியேறியவர்.

    மஹ்ஜோபி ஒரு சமூக வலைப்பதிவில் பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியை "சாத்தான்" என பொருள்பட பேசி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பதிவு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மஹ்ஜோபியை நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை உத்தரவிட்டது.

    மஹ்ஜோபி வெளியிட்டுள்ள கருத்துகள் பிரெஞ்சு குடியரசின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ளதாகவும், பெண்களுக்கு எதிராகவும், தவறான சிந்தனைகளை ஊக்குவித்து யூத மக்களுக்கு பதட்டத்தை உண்டாக்கும் வகையில் உள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்தது.


    ஆனால், மஹ்ஜோபி தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தனக்கு தேசிய கொடியை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

    "கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் மஜ்ஜோபி பிரெஞ்சு எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டார். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நாட்டிற்கு எதிரானவர்கள் எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம்" என பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் (Gerald Darmanin) கூறினார்.

    இந்நிலையில், துனிசியா தலைநகர் துனிஸ் (Tunis) செல்லும் விமானத்தில் அவர் ஏற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

    வெளிநாடுகளிலிருந்து பிரான்சிற்கு வந்து வாழ்பவர்களை அந்நாடு வெளியேற்ற விரும்பினால், உடனடியாக செயல்படுத்தும் வகையில் அந்நாட்டு குடியுரிமை சட்டங்களில் சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு காரணங்களுக்காக எஸ்யூவி ரக கார்களையே மக்கள் விரும்புகின்றனர்
    • நகரிலேயே வசிப்பவர்களுக்கான வாகன நிறுத்த கட்டணத்தில் மாற்றம் இல்லை

    மேற்கத்திய நாடுகளில் பொது போக்குவரத்திற்கான அரசு வாகனங்கள் குறைவு. மக்களில் பெரும்பாலானோர், கார்களையே தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

    சமீப சில வருடங்களாக, உலகளவில் எஸ்யூவி (Sports Utility Vehicles) எனப்படும் கார்களின் உற்பத்தி அதிகமாகி விட்டது.

    அவற்றில் அமரும் இட வசதி, பயணிப்பவர்களுக்கான எண்ணிக்கை, பொருட்களுக்கான இடம் உள்ளிட்டவை சிறிய கார்களை விட அதிகம். மேலும், இவை நீண்ட தூர பயணத்திற்கும், கரடுமுரடான சாலைகளிலும் செலுத்துவதற்கு தகுதி வாய்ந்தவை.

    எனவே, பெரும்பாலான மக்கள் எஸ்யூவி ரக கார்களையே விரும்பி வாங்குகின்றனர்.

    ஆனால், இவற்றை நிறுத்த அதிக இடம் தேவைப்படும்.

    இந்நிலையில், பாரிஸ் நகரில் வாகன நிறுத்துமிடங்களில் இது சிக்கலை தோற்றுவித்ததால், இவற்றிற்கான வாகன நிறுத்த கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்த அரசு, இது குறித்து மக்களின் எண்ணத்தை அறிய பொதுஜன வாக்கெடுப்பு (referendum) நடத்தியது.

    நேற்று நடைபெற்ற இந்த பொதுஜன வாக்கெடுப்பில், சுமார் 54.5 சதவீத மக்கள் கட்டண அதிகரிப்பிற்கு சம்மதித்துள்ளனர்.


    இதன்படி, பாரிஸ் நகரத்திற்கு உள்ளே, 1.6 டன் மற்றும் கூடுதலான எடையுள்ள வாகனங்களுக்கு சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம், சுமார் ரூ.1600 (18 யூரோக்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண விகிதம், முன்பிருந்ததை காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இது, தினந்தோறும் பல வெளியூர்களில் இருந்து பாரிஸ் நகருக்கு பல்வேறு பணிகளுக்காக வருபவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

    பாரிஸ் நகரிலேயே வசிப்பவர்களுக்கான கட்டணம் மாற்றப்படாததால், அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

    பாரிஸ் நகர மேயர், ஆன் ஹிடால்கோ (Anne Hidalgo), இதுவரை தனது 10-வருட பதவிக்காலத்தில், நகரின் பல இடங்களை பாதசாரிகளுக்கு சாதகமாகவும், சைக்கிள் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாற்றி அமைத்து வருகிறார்.

    எஸ்யூவி ரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது உயிரிழப்புகள் அதிகமாவதாகவும், அவற்றின் பயன்பாட்டிற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதாகவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்த கட்டண உயர்வு பலராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது.

    • போகியா நகரின் கார்கனோ மாபியா குழுவின் தலைவன் மார்கோ ராடுவோனோ
    • பல போர்வைகளை ஒன்றாக இணைத்து மதில் சுவரை தாண்டி தப்பினார் மார்கோ

    இத்தாலியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் பல "மாபியா" கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.

    இத்தாலியின் போகியா (Foggia) எனும் நகரில் செயல்பட்டு வந்த "கார்கனோ குழு" (Gargano clan) எனப்படும் இத்தகைய ஒரு கும்பலின் தலைவன், மார்கோ ராடுவோனோ (40).

    30 வருட நீண்டகால தேடலுக்கு பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்ட மார்கோவிற்கு, நீதிமன்றத்தால் 24-வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. மார்கோ மீது போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தன.

    இதையடுத்து இத்தாலியின் தீவு பிரதேசமான சார்டினியாவின் நுவோரோ பகுதியில் உள்ள கடுமையான காவல் கட்டுப்பாடுகள் நிறைந்த சிறையில் மார்கோ அடைக்கப்பட்டான்.

    கடந்த 2023 பிப்ரவரி மாதம், மார்கோ, சார்டினியாவின் சிறை அறையில் இருந்து வெளியே வந்து, பல போர்வைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, சிறைச்சாலையின் மதில் சுவரையும் தாண்டி, கீழே குதித்து தப்பிச் சென்றான்.

    ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகளின் தேடல் பட்டியலில் உள்ள முக்கிய குற்றவாளியான மார்கோ தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை மார்கோவை தேடி வந்தது.

    ஐரோப்பிய நாடுகளில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில், மார்கோ, பிரான்ஸ் நாட்டின் அலெரியா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு பெண்ணுடன் உணவருந்தி கொண்டிருந்த போது பிரான்ஸ் காவல்துறையினர் அவனை கைது செய்தனர்.

    போலியான பெயர் மற்றும் போலி பதிவு எண் கொண்ட வாகனத்துடன் அப்பகுதியிலேயே அவன் வசித்து வந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.

    மார்கோ சிறையிலிருந்து தப்பி சென்றது இத்தாலி அரசுக்கு பெரும் அவமானமாக கருதப்பட்டது.

    இந்நிலையில், அவன் மீண்டும் பிடிபட்டதால், தங்கள் நாட்டிற்கு அவனை அழைத்து செல்லும் முயற்சியில் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.

    • இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது.
    • பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்கத்தொடங்கின.

    பாரிஸ்:

    யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம்.

    இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது. பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது. பாரிசில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ-ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்சின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதன்படி, இனி பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும். இனிமேல் பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

    இந்தியர்கள் இனி ஈபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன்கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

    • மோனா லிசாவின் "மர்ம புன்னகை" தினந்தோறும் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது
    • உணவு முக்கியமா அல்லது ஓவியம் முக்கியமா என அந்த அமைப்பினர் கேட்டனர்

    15-வது நூற்றாண்டில், இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபல ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) வரைந்த உலக புகழ் பெற்ற ஓவியம், மோனா லிசா (Mona Lisa).

    மோனா லிசா ஓவியம், தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின், சியன் (Seine) நதிக்கரையில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


    மோனா லிசா ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் "மர்ம புன்னகை" தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

    அந்த ஓவியம் விஷமிகளால் நாசப்படுத்தப்படுவதை தடுக்க, பிரான்ஸ் அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு தடுப்பும், அதை தாண்டி குண்டு துளைக்க முடியாத ஒரு கண்ணாடியும் வைத்து மறைத்துள்ளது.

    நேற்று காலை சுமார் 10:00 மணியளவில் இரு பெண்கள் பார்வையாளர்களுடன் கலந்து அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைந்தனர்.

    திடீரென அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கோப்பையில் இருந்த ஆரஞ்சு நிற சூப்பை மோனா லிசா ஓவியத்தின் மீது வீசினர்.

    தொடர்ந்து ஓவியத்திற்கு முன் இருந்த தடுப்பை தாண்டி சென்று ஓவியத்தை ரசித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி உரையாற்ற தொடங்கினர்.

    ரிபோஸ்டெ அலிமென்டெய்ர் (Riposte Alimentaire) எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அவர்கள், தங்கள் உரையில்,"எது முக்கியம்? ஒரு ஓவியமா? அல்லது ஆரோக்கியமான உணவு மனிதகுலத்திற்கு தொடர்ந்து உணவு கிடைப்பதா? தவறான விவசாய கொள்கைகளால் விவசாயிகள் பரிதாப நிலையில் இழக்கின்றனர்" என கூறினர்.


    எதிர்பாராத இந்த செயலை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு பணியினர் அந்த இருவரையும் தப்ப விடாமல் பிடித்தனர்.

    அங்கிருந்த பிற சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

    இச்சம்பவத்தால் மோனா லிசா ஓவியத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்தது.

    சம்பவம் நடந்த பகுதி உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு பார்வையாளர்கள் மீண்டும் சிறிது நேரத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த இருவரையும் கைது செய்த பிரான்ஸ் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது.

    இது குறித்து பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சர், ரசிடா டாடி தனது எக்ஸ் கணக்கில், "மோனா லிசா நமது பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்று. எக்காரணம் கொண்டும் அதற்கு தீங்கு விளைவிப்பது ஏற்கப்பட கூடியது அல்ல" என பதிவிட்டுள்ளார்.

    ×