search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை ஆபத்தாக்கும் ரத்தம் ஏற்றுதல்
    X

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை ஆபத்தாக்கும் ரத்தம் ஏற்றுதல்

    • சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது உடலில் உள்ள எதிர்ப்பு தன்மை சார்ந்த ஒரு வைத்திய முறை.
    • ஒன்று முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

    மதுரை உத்தங்குடி சாஸ்தா கிட்னி மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியின் சேர்மனும், சிறுநீரகவியல் நிபுணருமான டாக்டர் பழனிராஜன் கூறியதாவது:-

    நாள்பட்ட சிறுநீரக செயல் இழப்பிற்கு தொடர் டிஅலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக அறுவை சிகிச்சை இரண்டுமே பரவலாக நடைமுறையில் உள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக டிஅலிசிஸ் சிகிச்சை என்பது அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கின்றது. டிஅலிசிஸ் செய்து கொள்பவர்களில் சுமார் ஒன்று முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

    இந்த குறைவான எண்ணிக்கைக்கு பல்வேறு விதமான மருத்துவ, பொருளாதார, மற்றும் குடும்ப காரணங்கள் உள்ளது அனைத்தும் நாம் அறிந்ததே. அவற்றை பற்றி நாம் இங்கு விவாதிக்க போவதில்லை. ஏனென்றால் அவை ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். நாம் இங்கு பார்க்க போவது ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து வசதி வாய்ப்புகள், சிறுநீரக தானம் தருவதற்கான டோனோர் தயாராக இருந்தும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத ஒரு ஆபத்தான சூழ்நிலை பற்றியதே.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது உடலில் உள்ள எதிர்ப்பு தன்மை சார்ந்த ஒரு வைத்திய முறை. எந்த ஒரு தனி நபரின் உடலில் உள்ள செல்களும் அவரவரின் மரபணுக்களுக்கு ஏற்ப தனி அடையாளம் கொண்டிருக்கும். ஒரே போல தோற்றம் கொண்ட இரட்டையருக்கு கூட மரபணுக்களின் உண்டாகும் செல்கள் முழுவதும் பொருந்திருக்காது. அப்படி இருக்கும் போது, நெருங்கிய உறவினர் என்னும் தாய், தந்தை, சகோதர உறவுகளுக்கு 50 சதவீத பொருத்தம் மட்டுமே இருக்கும்.

    உடலின் நோய் எதிர்ப்பு தன்மை தன்னுடைய செல்களை தவிர வேறு எந்த செல்கள் உடலுக்குள் வந்தாலும் அவற்றை கண்டறிந்து பின்னர் அந்த செல்களுக்கு எதிராக ஆன்டிபாடிஸ்யி உருவாக்கி அவற்றை கொன்று விடும். அதனால் தான் நாம் நம்மை தாக்கும் பல்வேறு கிருமிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றி ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடிகின்றது. இந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு உடலுக்குள் வரும் எல்லாமே அது கிருமியாக இருந்தாலும் அல்லது மாற்று உறுப்பு கிட்னியாக இருந்தாலும் ஒரே விதமான நிகழ்வு தான்.

    புதிதாக பொருத்தப்பட்ட சிறுநீரகங்களை, அதன் செல்களை கண்டறிந்து அதற்கான எதிர்ப்பு பொருட்களை உருவாக்கி 5 முதல் 7 நாட்களுக்குள் அந்த சிறுநீரகத்தை அழித்து விடும். இதற்கு ரெஜெக்ஷன் என்று பெயர். இந்த ரெஜெக்ஷன் உடலுக்குள் சிறுநீரகம் பொருத்திய 3-5 நாட்களுக்கு பின் தான் மெல்ல, மெல்ல தூண்டப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு உடலில் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தி புதிதாக பொருத்திய சிறுநீரகங்களை முற்றிலுமாக அழித்து விடும்.

    சிறுநீரக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்கு பின்னர் தரப்படும் மிக முக்கிய சக்தி வாய்ந்த மருந்துகள் இந்த எதிர்ப்பு தன்மையை கட்டுப்படுத்தி சிறுநீரகங்கள் தொடர்ந்து நல்லமுறையில் செயல்பட வைக்கின்றன. இந்த புதிய மாற்று சிறுநீரகம் உடலுக்குள் பொருத்துவதற்கு முன்னரே அந்த நபரின் உடலில் ஒருவேளை எதிர்ப்பு, பொருட்கள் உருவாகி இருந்தால் என்ன நடக்கும். அறுவை சிகிச்சையின் மூலம் சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களில் உடல் அந்த மாற்று உறுப்பை எதிர்த்து அழித்து விடும்.

    இதற்கு ஹைப்பர் ஆக்டிவ் ரெஜெக்ஷன் என்று பெயர். இது போன்ற ஒரு எதிர்ப்பு தன்மை ஒருவர் உடலில் ஏற்பட்டால் அவர் எப்போதும் தன்னுடைய எதிர்ப்பு தன்மை தூண்டப்பட்ட நிலையிலேயே இருக்க நேரிடும். இதனை கிராஸ் மேட்ச் என்ற பரிசோதனை மூலம் அறுவை சிகிச்சைக்கு முன்பே கண்டறிந்து இது போன்ற ஒரு ஆபத்தை தவிர்க்க முடியும். ஆனால் இந்த கிராஸ் மேட்ச் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியாத வேறு ஒரு எதிர்ப்பு தன்மையும் உண்டு. இது போன்று தூண்டப்படும் எதிர்ப்பு தன்மை வாழ்நாள் முழுவதும் நிலை பெற்று விடுவதால் அந்த நபரால் எப்போதும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாது. டிஅலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பின் ஒரு வெளிப்பாடாக ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிகப்பு அணுக்கள் குறைபாடாக இருக்கும். இதனை அதற்கான ஊசிகள் மூலம் மட்டுமே குணப்படுத்த வேண்டும்.

    மாறாக பல சந்தர்ப்பங்களில் ரத்தம் ஏற்றப்படுகிறது. சில சமயங்களில் 3 மாத இடைவெளிகளில் அடிக்கடி ரத்தம் ஏற்றப்படும் ஒரு சூழ்நிலையும் உள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு செயல் ஆகும். இது போல் ஏற்றப்படும் ரத்தம் சில சந்தர்ப்பங்களில் உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டி விட்டு அவர்களால் மாற்று உறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு நிலையை உண்டாகும். சமீபத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக வந்தவர்களில் 5 நபர்களுக்கு இது போல ஒரு தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தின் மூலம் ஏற்பட்டு தற்போது மட்டும் அல்ல எப்போதுமே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியாத சூழலில் உள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. எனவே டிஅலிசிஸ் சிகிச்சையில் ரத்தம் ஏற்றி கொள்வது என்பது உடலுக்கு நல்லது செய்யும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று தவறாக எண்ணாமல் அதன் ஆபத்தை உணர்ந்து தவிர்ப்பதே நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×