search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் சென்னை மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்
    X

    காஞ்சிபுரத்தில் சென்னை மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

    • மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    • காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே செங்கல்பட்டு வழியாக பயணிகள் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் ஆயிரக்காணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு இந்த ரெயில் பெரிதும் பயன்உள்ளதாக உள்ளது. காலை நேரத்தில் குறித்த நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குசெல்ல ஏராளமான பயணிகள் திருமால்பூர் - சென்னை கடற்கரை ரெயிலில் பயணம் செய்வதால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

    மேலும் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரெயில் நிலையங்களில் சரக்குகளை கையாள முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தென்னக ரெயில்வேக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    இதனால் சரக்கு ரெயில்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பயணிகள் மின்சார ரெயில்களை நிறுத்தி தாமதமாக இயக்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 6.15 மணிக்கு காஞ்சிபுரம் ரெயில் நிலையத்திற்கு வர வேண்டிய திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தாமதமாக 6.45 மணிக்கு வந்தது. இதனால் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென அவர்கள் மின்சார ரெயில் முன்பு நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தினமும் தாமதமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார ரெயிலை குறித்த நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மின்சார ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தினமும் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதனை தவிர்க்க காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இடையே இரு வழிப்பாதை திட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

    Next Story
    ×