என் மலர்
கதம்பம்

அது தான் ஒழுக்கம்...
- ஒவ்வொருவரும் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.
- பிறர்க்கு எவ்வகையிலும் தீமை ஏற்படாதபடி எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒழுங்குபடுத்திக்கொண்டு வாழ்வது தான் ஒழுக்க வாழ்வு.
ஒவ்வொரு செயலுக்கும் ஓர் விளைவுண்டு. அந்த விளைவிலிருந்து யாருமே தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமைதியும் இன்பமும் ஏற்படும். அறிவு வளர்ச்சிக்கும் வழி ஏற்படும். இன்றேல் அமைதி குன்றி வளர்ச்சி தடையுறும்.
அவரவர் செய்யும் தவறுகள் தான் மதவாதிகளால் பாபம் என்றும், சிந்தனையாளர்களால் தவறு என்றும், அரசியல்வாதிகளால் குற்றம் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்றுமே ஒரே பொருளைக் குறிப்பதுதான்.
நாம் ஒரு முறை ஒரு செயலை செய்துவிட்டால், அது நமது உடலுறுப்புக்களில் பதிந்து மீண்டும் அதையே செய்யத் தயாராகிவிடும். இந்தப் பதிவு, எண்ண அழுத்தமாக மூளையிலும் பதிந்துவிடுகிறது. அதுவுமின்றி, சந்ததித் தொடர்புக்கு காரணமாக உயிர்வித்திலும் அது பதிந்து விடும்.
ஆகவே தான், தீமையைத் தவிர்த்து நல்லதே செய்ய நாம் பழகிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இதற்கு தான் ஒழுக்கம் என்று பெயர்.
பிறர்க்கு எவ்வகையிலும் தீமை ஏற்படாதபடி எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒழுங்குபடுத்திக்கொண்டு வாழ்வது தான் ஒழுக்க வாழ்வு ஆகும். மற்ற எல்லாம் இழுக்கான வாழ்வாகிய துன்பத்தையே தான் கொடுக்கும்.
இதனால் காரண காரிய விளைவு அறிந்து இன்பம் தரும் நற்செயல்களிலேயே ஒருவன் ஈடுபடவேண்டுவது அவசியமாகிறது.
- வேதாத்திரி மகரிஷி.