search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போரில், ரஷியா தோற்றே ஆக வேண்டும் - மேக்ரான் திட்டவட்டம்
    X

    போரில், ரஷியா தோற்றே ஆக வேண்டும் - மேக்ரான் திட்டவட்டம்

    • தளவாடங்கள் இல்லாததால் ரஷிய ராணுவம் முன்னேறுவதை உக்ரைனால் தடுக்க முடியவில்லை
    • ரஷியா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம் என்றார் மேக்ரான்

    கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு தொடர்ந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவுகிறது.

    உக்ரைனிடம் போதுமான அளவு ராணுவ தளவாடங்கள் இல்லாததால், தங்கள் நாட்டில் ரஷிய ராணுவம் முன்னேறி , பிராந்தியங்களை கைப்பற்றுவதை தடுப்பது கடினமாக உள்ளது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.

    மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவிகள் கிடைப்பது தாமதமாவதால், உயிரிழப்புடன் உக்ரைனின் பல பிராந்தியங்களை ரஷியாவிடம் இழக்க நேரிடும் என உக்ரைன் ராணுவ அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார்.


    இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.

    இதில் பேசிய பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் தெரிவித்ததாவது:

    இப்போரில் ரஷியா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷியா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம்.

    ரஷியா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்.

    ரஷியாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷிய மக்களுடன் அல்ல.

    குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும்.

    உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம்.

    இவ்வாறு மேக்ரான் கூறினார்.

    சில தினங்களுக்கு முன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், "நேரடியாக மேற்கத்திய நாடுகளின் ராணுவம் உக்ரைன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷியாவிற்கும் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் "என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×